/* */

கடற்படை பெண் அதிகாரிகளின் வெற்றிப் பயணம்: நாடு திரும்பிய ஐ.என்.எஸ்.வி தாரிணி

இந்தியக் கடற்படை பெண் அதிகாரிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் ஐ.என்.எஸ்.வி தாரிணி வெற்றிகரமாக நாடு திரும்பியது.

HIGHLIGHTS

கடற்படை பெண் அதிகாரிகளின் வெற்றிப் பயணம்: நாடு திரும்பிய ஐ.என்.எஸ்.வி தாரிணி
X

இந்தியக் கடற்படை பெண் அதிகாரிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் ஐ.என்.எஸ்.வி தாரிணி வெற்றிகரமாக நாடு திரும்பியது.

இந்தியக் கடற்படையின் பாய்மரக் கப்பல் (ஐ.என்.எஸ்.வி) தாரிணி சுமார் இரண்டு மாத கால வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் நேற்று கோவாவில் உள்ள அதன் தளத் துறைமுகத்திற்கு வெற்றிகரமாக திரும்பியது.

இந்தியக் கடற்படையின் பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் கே தில்னா, லெப்டினன்ட் கமாண்டர் ஏ ரூபா ஆகியோர் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். இவர்களின் விதிவிலக்கான பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில் இந்தியாவிலிருந்து இதுபோன்ற சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியவர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

புகழ்பெற்ற மாலுமி மற்றும் இவர்களின் வழிகாட்டியான கமாண்டர் அபிலாஷ் டோமி (ஓய்வு) இந்தப் பயணத்தை கோவாவிலிருந்து கடந்த பிப்ரவரி 28 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியப் பெருங்கடலின் கணிக்க முடியாத நிலைமைகளையும் மீறி, 22 நாட்கள் பயணம் செய்த பின், ஐ.என்.எஸ்.வி தாரிணி கடந்த மார்ச் 21 அன்று மொரீஷியஸில் உள்ள போர்ட் லூயிஸை அடைந்தது.

போர்ட் லூயிஸில் பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து, லெப்டினன்ட் கமாண்டர்களான தில்னா, ரூபா ஆகியோர் கோவாவுக்கு திரும்பும் பயணத்தை கடந்த மார்ச் 30 அன்று தொடங்கினார்கள். பலத்த காற்று, பாதகமான கடல் நிலைகள், கொந்தளிப்பான கடல் ஆகியவற்றால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை இந்தப் பயணத்தில் இவர்கள் எதிர்கொண்டனர். இவர்களின் வெல்லமுடியாத உத்வேகம் மற்றும் உறுதியான தீர்மானம் இவர்களின் முன்னோக்கி செலுத்தியதுடன், ஐ.என்.எஸ்.வி தாரிணி நேற்று கோவாவுக்கு பாதுகாப்பாக திரும்ப வழிவகுத்தது.

ஐ.என்.எஸ் மண்டோவியின் கமாண்டிங் அதிகாரி மற்றும் வடக்கு கோவா கடற்படை நிலைய கமாண்டர் ஆகியோரால் ஐ.என்.எஸ்.வி தாரிணி ஐ.என்.எஸ் மண்டோவி படகு தளத்தில், கடற்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் வரவேற்கப்பட்டது. இந்தப் பயணம் இந்தியக் கடற்படையின் கூட்டு சாதனை மற்றும் தோழமையின் அடையாளமாக இருந்தது.

ஐ.என்.எஸ்.வி தாரிணி கப்பலில் இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கவுள்ள உலகைச் சுற்றி வரும் பயணத்திற்கு (சாகர் பரிக்கிரமா - 4) இரு பெண் அதிகாரிகளும் இப்போது தயாராகி வருகின்றனர்.


ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் டெல்லி ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராணுவ மருத்துவ சேவைகள் இன்று டெல்லி இந்தியத் தொழில்நுட்ப கழகத்துடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், டெல்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர். புதிய மருத்துவ சாதனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது, பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவது ஆகியவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், கூட்டுக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் கூட்டு பிஎச்டி ஆய்வுகளை உருவாக்கவும் திட்டமிடப்படும்.

ராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த மருத்துவ சேவையை வழங்க ஏஎஃப்எம்எஸ் உறுதிபூண்டுள்ளதாகவும், ஐ.ஐ.டி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பது இந்த உறுதிப்பாட்டை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும் ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டிற்கும் ராணுவத்திற்கும் பயனளிக்கும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புகள் நிறைந்தது என்று தில்லி ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி தெரிவித்தார்.

Updated On: 22 April 2024 2:33 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு